அலைக்கற்றை விவகாரமும் உழைக்கும் மக்களின் கண்ணோட்டமும்
Posted by மகேஷ் மேல் திசெம்பர் 29, 2010
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஆளும் கூட்டணி பொது கணக்குக் குழு விசாரனையே போதும் என்கிறது. எதிர்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையே வேண்டும் என்கின்றன.
இந்த விவகாரத்தால் வரலாறு காணாத வகையில் ஒரு பாராளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பலரும்.
இந்த விவகாரத்தில் ஆளும் கூட்டணியின் நோக்கம் நமக்கு புரிகிறது. அவர்கள் எப்பாடு பட்டேனும் இப்பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் எதிர்கட்சிகளின் சமரசமற்ற இந்த போராட்டத்திற்கு பின்னான காரணங்கள் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்துவதாகவே உள்ளது.
அதற்கான காரணங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி. இவர்கள் நோக்கம் என்ன? இந்த விசயத்தில் இவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது எதை? இவர்கள் அடைய விரும்புவது எதை? இப்பிரச்சினை இந்தளவிற்கு பாராளுமன்றத்தை முடக்குவதற்கு பின்னுள்ள காரணங்கள் உண்மையிலேயே மக்கள் நலம் சார்ந்ததுதானா? இன்னும் பிற.
இவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவர்களின் கடமை. ஆனால் அவர்களுக்கு அத்தகைய சவால்கள் அந்தளவிற்கு எளிதானதல்ல. வெறும் வார்த்தைகளின் வழியே மக்கள் அவற்றை நம்பத் தயாரில்லை. அவர்கள் அவற்றை தங்களின் பொது ஓழுக்கம், தனிமனித ஓழுக்கம், அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றின் வழியே தான் நிரூபித்தாகவேண்டும்.
உலகம் காணாத இந்த ஊழலில் பாதிக்கப்பட்டவர்கள், துரோகமிழைக்கப்பட்டவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள், தங்களின் தேச சொத்தை பறிகொடுத்தவர்கள் இந்திய மக்களே. இது ஒன்றும் எதிர்கட்சிகளின் சொந்த பிரச்சினை அல்ல. ஆனால் இந்திய மக்கள் இவ்விசயத்தில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளால் திட்டமிட்டே வெறும் பார்வையாளர்களாக ஆக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
உங்களுக்காக போராட நாங்கள் இருக்கிறோம். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள் என்ற மனப் போக்கே மேலோங்கி இருக்கிறது. கால்வயிற்றுக்கும் அரைவயிற்றுக்கும் சாப்பிட்டு விட்டு விவசாய நிலங்களிலும், கடல்களிலும், தொழிற்சாலைகளிலும், கட்டிடங்களிலும், வியாபார நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும், தெருக்களிலும், காடுகளிலும் தங்கள் கைகால்கள் ஓய 12 மணிநேரத்திற்கும் அதிகமாக இன்னும் தொலையாத நம்பிக்கைகளோடு வேலை செய்து கொண்டிருக்கும் உழைப்பாளர்களின் வியர்வையால் உருவான தேசத்தின் சொத்து இங்கு ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் சில கொள்ளையர்களால் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காத்து கொள்வதற்காக வாங்கிய கடனுக்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை. உண்மையில் இந்த தேசத்தின் மக்களாகிய நம் அனைவருக்கும் உணவு அளிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல்தான் அவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள என்ன பெரிய அறிவுவேண்டும். அதன் தீவிரத்தை நாம் உணரவில்லை.
இந்தியாவின் தென்கோடியில் மீனவர்கள் அன்டைநாட்டு இராணுவத்தின் கொலை வெறித் தாக்குதலுக்கு தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல நூறு பேர் இந்த தாக்குதல்களில் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன தங்கள் குடும்பத்தை காப்பதற்காகவா உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்கிறார்கள்? இந்த தேசத்து மக்களின் உணவுத் தேவைக்காக தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களுடைய தேசத்தின் சொத்து இங்கு சூறையாடப்பட்டிருக்கிறது.
எதிர்கட்சிகள் இந்த போராட்டத்தில் சோரம்போகிவிடலாம், ஏமாற்றிவிடலாம் ஆனால் இந்நாட்டு மக்கள் சோரம்போக வாய்ப்பில்லை அது அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம். இந்நாட்டு மக்கள் ஏமாந்துவிடுவதற்கு வாய்ப்பில்லை அது அவர்களின் எதிர்கால சந்ததிகளை ஏமாற்றுவதற்கு சமம். அதனால் இம்மக்கள் இப்போராட்டத்தில் அணிதிரட்டப் படவேண்டியது முக்கியம்.
இந்த 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் குற்றம் நடந்திருக்கிறது என்பது ஏற்கனவே போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது கோரப்படுவதெல்லாம். அது எப்படி நடைபெற்றது? பொது அரசியல் சட்டம் மற்றும் ஒவ்வொரு துறைகளுக்கான விதிகளும் சட்டங்களும் எவ்வாறெல்லாம் உடைத்தெறியப்பட்டுள்ளன? இச்சட்டங்களின் விதிகளின் எந்தெந்த பகுதிகளெல்லாம் இத்தகைய குற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பளிக்கும் வகையில் பலஹீனமாக இருக்கின்றன? யார் யாரெல்லாம் இந்த குற்றத்தில் பங்கெடுத்துள்ளனர்? இதன் தொடர்புகள் எந்த எல்லை வரை நீள்கிறது? மிகச் சரியாக எவ்வளவு பணம் களவாடப்பட்டுள்ளது? எந்தெந்த நிறுவனங்களின் பெயரில் எவ்வளவு பணம் களவாடப்பட்டுள்ளது? அந்தப் பணமெல்லாம் தற்பொழுது எந்தெந்த ரூபத்தில் உள்ளன? என்பன போன்றவற்றை ஆய்வதற்கான விசாரனையையே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
அப்படியானால் எதிர்கட்சிகள் மக்களுக்கு சில வாக்குறுதிகளை உத்திரவாதங்களைத் தரவேண்டும்
1. குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்ட பிறகு எத்தகைய தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்?
2. களவாடப்பட்ட தேசத்தின் சொத்து முழுவதையும் எவ்வாறு மீட்கப் போகிறோம்?
3. இது போன்ற தவறுகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க என்னென் மாற்று நடவடிக்கைகள், அரசியல், நீதி, நிர்வாக சட்டதிட்டங்களில் ஏற்படுத்தப் போகிறோம்?
என்பதை தெளிவாக உறுதியாக மக்களுக்கு சொல்ல வேண்டும்.
தங்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் தேசத்தையே ஸ்தம்பிக்க செய்யும் அளவிற்கு விரிவுபடுத்த வேண்டும். தங்களின் அரசியல் செயல்பாடுகளை பாராளுமன்றத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் வீதிக்கு வந்து மக்களை அணிதிரட்டி அரசியல்படுத்தி நடத்த வேண்டும்! செய்வார்களா இதை?
அவர்கள் செய்யாவிட்டால் அவர்களையும் எதிர்த்து உழைக்கும் மக்கள் தீவிரமான ஒத்துழையாமை இயக்கங்களை, சத்தியாகிரகங்களை எந்தவிதமான சமரசங்களுக்கும் இடம் கொடாமல் தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை உறுதியோடு இறுதிவரை நடத்தவேண்டும்.
பின்னூட்டமொன்றை இடுக