சர் தாமஸ் மூரின் உடோபியா
1477 முதல் 1535 வரை வாழ்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் மூர் என்பவர் எழுதிய நுாலின் பெயர் “உடோபியா”. இதுவே இத்தலைப்பில் எழுதப்பட்ட முதல் நுால். இது கிரேக்க சொல்லான ou-topos என்பதன் ஆங்கிலச் சொல். இதற்கு அர்த்தம் “எங்குமே இல்லாத” அல்லது “காணமுடியாத இடம்” என்பனவாம். இதே போன்ற உச்சரிப்பைக் கொண்ட மற்றொரு கிரேக்கச் சொல் eu-topos, என்பதன் அர்த்தம் “நல்ல இடம்”.
இந்த நுாலில் சர் தாமஸ் மூர், ஒரு தீவில் இருக்கக்கூடிய தனக்கென பிரத்யேகமான சமூக ஒழுங்குகளை, வாழ்க்கைமுறையை, பண்பாட்டை கடைபிடித்து ஒழுகும் ஒரு சமூகத்தை படைத்துக் காட்டியுள்ளார்.
பதினாறாம் நுாற்றாண்டின் முக்கிய மூன்று உடோபியன் எழுத்துக்களின் தொகுப்பாக வெளிவந்த ஆக்ஸ்போர்ட் கிளாசிக்கல் பதிப்பின் முன் அட்டை
இந்நுால் இரண்டு பகுதிகளாக உள்ளது. இதன் இரண்டாம் பகுதி 1515ல் எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி அதற்கு அடுத்த வருடம் எழுதப்பட்டுள்ளது. ஆட்வெர்ப் என்னும் இடத்திற்கு மூர் சென்ற பொழுது அங்கு அவர் ஆட்வெர்பின் குடிமகனான பீட்டர் கில்சை சந்திக்கிறார். பீட்டர் கில்ஸ் அவரை ரபேல் கித்தலோடே என்பவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவருடைய பெயருக்கு கிரேக்க மொழியில் “முட்டாள்தனமாக பேசக்கூடியவர்” என்று அர்த்தம். அவருடனான உரையாடலில் அவர் ஒரு கடலோடி என்பதைத் தாண்டி பல விசயங்களைத் தெரிந்தவர் என்பது தெரியவருகிறது. மூர் அவருடனான உரையாடல்களில் மூலம் அவர் பழுத்த ஞானமுடையவர் என்பதையும், நம்பமுடியாத அனுபவங்களை பெற்றவர் என்பதையும் அறிகிறார். ரபேல் கித்தலோடே தனது நண்பரான அமெரிகோ வெஸ்பெரிக்கியுடன் அமெரிக்காவிற்கு ஒரு கடற்பயணம் செய்கின்ற பொழுது, சமுத்திரத்தின் மேற்கு அரைக்கோளத்தில் எங்கோ ஓரிடத்தில் திறண்மிக்க நிலமான உடோபியாவைக் கண்டிருக்கிறார்.
உடோபியா நுாலின் முதல் பகுதி அந்த முன்னுதாரணமில்லாத தொன்மத் தீவைப் பற்றி விவரிக்கவில்லை. அவர் ஏழாம் ஹென்றியின் காலத்தில் இங்கிலாந்திற்குச் செல்கிறார். அங்கு அவர் கார்டினலாக உள்ள மோர்டன் என்பவரைச் சந்தித்து சில சீர்திருத்தங்களை பரிந்துரைக்கிறார். அச்சீர்திருத்தங்கள் இங்கிலாந்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறார். அவற்றுள் சில, திருடர்களுக்கு வழங்கப்படும் மரணதண்டனையை நீக்குதல், சூதாட்டத்தை தடை செய்தல், கம்பளிக்காக செம்மறி ஆடுகள் வளர்ப்பதை முழுமையாக சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்தல், கொலைகார வீரர்களை பயன்படுத்தலை நிறுத்துதல், சரக்குகளின் விலையை குறைத்தல், பணக்காரர்கள் மற்றும் பெரும் நிலவுடைமையாளர்களுக்கு பொது நிலங்களை பகிர்ந்து அளிப்பதை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகியவை. இவருடைய இந்த ஆலோசனைகளை கார்டினல் மோர்டன் அமைதியாக பதிலேதும் கூறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடன் அமர்ந்து இந்த உரையை கேட்டுக் கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவர் இது இங்கிலாந்தின் வரலாற்றுக்கும் வழக்கத்திற்கும் மாறானது, இத்தகைய சீர்திருத்தங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த முடியாது என்கிறார்.
இந்த நுாலின் முதல் பகுதியில், 16ம் நுாற்றாண்டு இங்கிலாந்தில் நிலவிய மோசமான சமூக பொருளாதார அம்சங்கள் பலவற்றை மூர் குறிப்பிடுகிறார். இதற்கெல்லாம் அப்பால் மூர் மற்றொன்றையும் குறிப்பிடுகிறார். எந்த ஒரு சமூகத்தின் தீமைகளும், அதற்குள் இருப்பவர்களை விட அதற்கு வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கண்களுக்குத்தான் சட்டென பிடிபடும். முதல் பகுதியில் வரும் வழக்கறிஞரின் நீண்ட மறுப்புரைகளில் குறுக்கிட்டு கார்டினல் மோர்டன், சுருக்கமாக கூறுகிறார். பதினாறாம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல மக்களும் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்த முதல் பகுதி, பின் வரும் பகுதியில் மூர் உருவாக்கி காட்டும் உடோபியன் சமூகத்திற்கான நியாயப்பாட்டை நிறுவுவதாக உள்ளன.
நுாலில் இடம்பெற்றிருந்த உடோபிய தீவின் வரைபடம்
இரண்டாம் பகுதியில் ரபேல் கித்தலோடே தனது பயணங்களின் போது தான் கண்ட, புராணீகமான அந்த உடோபியன் தீவின் பண்பாட்டை விரிவாக விளக்குகிறார். அந்த உடோபிய தீவு மன்னராட்சி பிறை நிலா வடிவில் அமைந்துள்ளது. இரு நுாறு மைல் விட்டம் கொண்டது. பிற பகுதிகளிலிருந்து அது மனிதர்களால் கட்டப்பட்ட கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது. அது அந்த ராஜாங்கத்தின் அரசரான உடோபசால், எதிரிகளாலோ, மனித குலங்களை வேட்டையாடும் அண்டை அயலாராலோ தாக்கப்படாமல் இருப்பதற்காகவும், தங்களை காத்துக் கொள்வதற்காகவும் தங்களுடைய உடோபியா பரிசோதனை முயற்சிகள் வேறு எவராலும் முறியடிக்கப்படாமல் இருப்பதற்காகவும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தீவு 54 மாகானங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிற்கும் ஒரு நகரம் உள்ளது. ஒவ்வொரு நகரமும் அதன் அண்டை நகரிலிருந்து ஒரு நாள் நடைபயண துாரத்தில் உள்ளன. அதன் தலைநகரத்தின் பெயர் அமேரூட். அந்நகரத்தின் தலைவனே, அந்தத் தீவின் ஆட்சியாளன்.
அதன் அரசாங்கம் ஒப்பீட்டளவில் எளிமையானது. வயோதீகர்களால் பாரம்பரிய முறைப்படி ஆளப்படுவது. முப்பது குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு அலகிற்கும் ஒருவர் வாக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இது போன்ற பத்து குழுக்கள் சேர்ந்த ஒவ்வொரு அமைப்பும் அந்தத் தீவின் கவுன்சிலிற்கான ஒரு உறுப்பினரை தேர்வு செய்கிறது. இந்த கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தத் தீவின் இளவரசர் ஆவார். ஒரு வேளை அவர் கொடுங்கோலாட்சி செய்து ஆட்சியில் இருந்து துாக்கி எறியப்படாவிட்டால், அவர் தன் வாழ்நாள் முழுதும் அரசராக இருப்பார்.. இந்த கவுன்சில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு முறை கூடி முக்கிய விசயங்களை விவாதிக்கும். எந்த ஒரு முடிவும் அதே நாளில் எடுக்கப்படுவதில்லை. பிரச்சினைகள் அக்குவேறாக ஆணிவேறாக எந்த அவசரமும் இன்றி விவாதிக்கப்படும்.
தனது குறியீடான கதிர் கட்டுடன் செல்லும் மன்னர்
தனது லட்சிய அரசில் மூர் அனைத்து மனிதர்களும் உழைக்க்கூடியவர்களாக படைத்துள்ளார். அசாதாரணமான திறமைகளைக் கொண்டவர்களும், பயிற்சிக்காகவும், கல்விக்காகவும் தேர்வு செய்யப்பட்டவர்களையும் தவிர, எல்லா மனிதர்களும் வியாபாரத்திலோ, கைவினைத் தொழில்களிலோ ஈடுபட்டுள்ளார்கள். வேலைநாள் என்பது 6 மணி நேரம் ஆகும். வேலை நேரம், காலை மதியம் என ஒவ்வொரு நாளும் சம அளவில் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் இரண்டு வருடங்களை கிராமப்புறங்களில் விவசாயத்தில் அங்கேயே தங்கி ஈடுபட வேண்டும். அனைவரும் வேலை செய்வார்கள், அனைவருக்கும் தேவையான உணவும், பிற பொருட்களும் அங்கு இருக்கும். அனைத்து சரக்குகளும் சமூகத்திற்கு உடைமையானதாக இருக்கும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சமூகத்தின் நன்மையையும், சமூகத்தின் வளத்தையும் காத்து நிற்பார்கள். மக்கள் தங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் எளிமையாக அமைத்துக் கொண்டிருப்பார்கள். யார் ஒருவரும் தங்களின் சக மனிதர்களைவிட அதிகமாக பெற வேண்டும் என்ற விருப்பங்கள் இல்லாதவர்களாக இருப்பார்கள். உடோபியாவின் அரசன் கதிர் கட்டு ஒன்றை தங்கள் வளத்தின் குறியீடாக எப்பொழுதும் தாங்கிச் செல்வான். ஒவ்வொரு மனிதனும் இயற்கையோடு இயைந்த உடைகளான தோல், கம்பளி போன்றவற்றால் ஆன ஆடைகளையே அணிவார்கள். நகைகள் குழந்தைகள் விளையாடுவதற்கு கொடுக்கப்படும். ஆடம்பரமான உடைகளும், நகைகளும் அணிவது குழந்தைத்தனமாகக் கருதப்படும். தங்கம் வெள்ளி முதலானவற்றை மக்கள் வெறுப்பார்கள், அவை கழிவறை பீங்கான்கள் செய்யவும், அடிமைகளைக் கட்டும் சங்கிலிகள் செய்யவும், குற்றதண்டனைகளுக்கான குறியீடுகள் செய்யவும் பயன்படுத்தப்படும்.
வன்முறை, இரத்தவெறி, சூது ஆகியவை உடோபியாவில் தடைசெய்யப்பட்டுள்ளன. கால்நடைகளை மக்கள் வெட்டமாட்டார்கள் அடிமைகள்தான்(!) வெட்டுவார்கள். மக்கள் பொழுதுபோக்க தோட்டங்களை சரிசெய்தல், வீடுகளை அலங்கரித்தல், மனிதத்தன்மையை மேம்படுத்தும் சொற்பொழிவுகள், உரைகளை கேட்டல், இசையை ரசித்தல், ஒவ்வொருவருக்கும் பயனுள்ள முறையில் கலந்து செயல்படுதல் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். நகரத்தின் ஒவ்வொரு கால்பகுதியிலும் அமைந்திருக்கும் விலாசமான, காற்றோட்டமான, மருத்துவமனைகளில் நோயாளர்கள் தங்கி சுகமடைவார்கள். சுகப்படுத்த முடியாத வியாதிகளால் துன்பப்படுபவர்கள் பாதிரியார்கள், அரசாங்கத்தார், மற்றும் அவர்களுடைய உறவினர்களின் ஆலோசனையுடனும் அனுமதியுடனும் வலியற்ற முறையில் மரணமடைய உதவுவார்கள். அனைவரும் பொது உணவுக் கூடங்களில் உணவு உண்பார்கள், அவ்வுணவானது அடிமைகளால் அக்குடும்ப தலைவிகளின் தலைமையில் சமைக்கப்பட்டு பரிமாறப்படும். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தவிர, இளையவர்களும் முதியவர்களும் ஒன்றாக சேர்ந்து உணவு உண்பார்கள். அவர்கள் உணவு நேரத்தின் போது தங்களுக்கிடையே மேலோட்டமான, சுவையான விசயங்கள் குறித்து பேசிக் கொள்வார்கள்.
உடோபியாவின் சமூக உணவுக் கூடம் (நுாலின் பக்கங்களில் இடம்பெற்ற ஓவியம்)
குற்றவாளிகள் உடோபிய சமூகத்தில் கொலை செய்யப்படமாட்டார்கள், அவர்கள் அடிமைகளாக்கப்படுவார்கள். களவொழுக்கம் தண்டனைக்குரிய குற்றம், அவர்கள் அடிமைகளால் தண்டிக்கப்படுவார்கள். திருமணம் செய்து கொள்வதற்காக தங்கள் இணையை தேர்வு செய்து கொள்வதற்கு உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் தங்களுக்கிடையே ஒளிவு மறைவின்றி அவர்களின் விருப்பத்தையும், ஆரோக்கியத்தையும் ஒருவருக்கொருவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். திருமணத்திற்கு ஏற்ற ஆண் வயது 22 பெண்ணின் வயது 18. குடும்பத்தின் நலனே அடிப்படைக் குறிக்கோள். சமூக நலன் சிறந்த முறையில் இருப்பதையே மக்கள் விரும்புவார்கள்.
நிச்சயதார்த்தம் (நுாலில் இடம்பெற்றுள்ள ஓவியம்)
உடோபியன் மக்கள் மதநம்பிக்கை உடையவர்கள். அவர்கள் மத சகிப்புத்தன்மையை கடைபிடிப்பவர்கள். சிலர் கிறிஸ்துவர்களாக இருப்பார்கள். பிறர் அவரவர் விரும்பும் கடவுளையும், மதத்தையும் பின்பற்றுவார்கள். நாத்திகமும், ரகசிய ஆபத்தான மதக் குறுங்குழுக்களும் தடைசெய்யப்பட்டிருக்கும்.
இது தான் அந்த நுாலில் உள்ள சுருக்கமான விசயம்.
வழக்கறிஞராகவும், அரசாங்க உயர் பதவி வகித்தவராகவும் அக்காலத்தில் தாமஸ் மூர் இருந்துள்ளார். எட்டாம் ஹென்றியின் நம்பிக்கைக்குரிய அரசதிகாரியாக இருந்துள்ள அவர், 1529ல் இங்கிலாந்தின் சான்சிலராக உயர்ந்துள்ளார். கத்தோலிக்க மதப்பற்றாளராக இருந்த அவர், அன்றைக்கு கத்தோலிக்கத்தில் சீர்திருத்தம் குறித்த தீவிரமாக பேசப்பட்ட சூழல்களிலும், புரோட்டஸ்டன்டினிசத்தின் தோற்றத்திற்கான காரணமாக இருந்த அன்றை ஐரோப்பிய தேவாலய சூழல்களில் பதினாறாம் நுாற்றாண்டில் மூர் எழுதிக் கொண்டிருந்தார். கத்தோலிக்க தேவாலய முறையிலிருந்து விலகிய மன்னருக்கு எதிராக தொடர்ந்த பேசி வந்ததால் அவர் 1535 ஜீலை 6ம் நாள் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இவரைப் போலவே பதினாறாம் நுாற்றாண்டில் பிரான்சிஸ் பேகன் “நியூ அட்லான்டிஸ்” என்கிற உடோபியன் நாவலை எழுதினார். பிளாட்டோவின் டிமியாசில் (Timaeus) முதலில் தொலைந்த அட்லான்டிஸ் பற்றிய கதை இடம் பெற்றிருந்தது. நியூ அட்லான்டிஸ் மிக பண்டைய கால இடம் ஒன்றைப் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தை வழங்குகிறது. இந்தத் தீவின் மக்கள் வளர்ந்த நாகரீகத்தினைச் சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படுகிறார்கள். இதன் வரலாறு ஊழிக்காலத்தில் தொடங்குகிறது. எப்படி இருந்தாலும் உடோபியா சுவாரசியமான, கற்பனைநிறைந்த, காதல்மிக்க கட்டுக்கதையாக உள்ளது. அது மேலும் அறிவார்ந்த அம்சங்களையும் கொண்டதாக உள்ளது. உடோபிய என்பது ஒரு கோட்பாடாக வாழ்க்கை அமைப்பாக இருந்தாலும் அது வெறும் வாதத் தொகுப்பு மட்டுமல்ல. அது காட்சிப்பூர்வமானது. அது அறிவார்ந்த காதல்பூர்வமான பாத்திரங்களைக் கொண்டது.
பேகான் தனது வர்ணனைகளை மிக அழகாக துவங்கியுள்ளார். இது மிக அழகியல்பூர்வமாக எழுதப்பட்ட ஓர் எழுத்து. இக்கதை முழுமையடையாத ஒன்றாக பேக்கனால் விடப்பட்டுவிட்டது. அவருக்கு ஒரு காதல் கதையோ அல்லது சுவாரசியமான கதையோ சொல்வது நோக்கமாக இருக்காததால், தான் சொல்ல அறிவியல்பூர்வமான விசயங்களை சொல்லிவிட்டதாக கருதிய ஓர் இடத்தில் அவர் கதையை நிறுத்திவிட்டார்.
பிரான்சிஸ் பேகானின் உடோபியா முந்தைய உடோபியாக்களை சிறிதளவே ஒத்திருந்தது. பிளாட்டோவின் ரிபபிளிக்கை போல அது ஒரு பொருளாதார தத்துவமோ, மூரின் உடோபியாவைப் போலவோ ஜொனாதன் ஸ்விப்டுடையதைப் போலவோ அது பொருளாதார பகடியோ அல்ல. அவருடையது அவருடைய சமகாலத்தவரான காம்பனெல்லாவின் 1620ல் பதிப்பிக்கப்பட்ட நுாலான “The City of the Sun”ற்கு மிக நெருக்கமானது என சொல்லப்படுகிறது. இவர்கள் இருவருமே அரிஸ்டாடிலிய முறைகளை கேள்விக்கு உட்படுத்துபவர்கள்.
அதே போல ஹென்றி நெவில் என்பவர் “தி ஐசில் ஆப் பைன்ஸ்” எழுதினார்.
பதினெட்டாம் நுாற்றாண்டு புரட்சிகளும், உடோபிய சிந்தனைகளும்
இவர்களைத் தொடர்ந்து 18 நுாற்றாண்டுகளில் பல உடோபிய சிந்தனையாளர்கள் தோன்றினார்கள் de Contdorcet, ரூசோ, வாசிங்கடன் போன்றவர்கள். இத்தகைய உடோபிய சிந்தனைகள் சமூக பொருளாதார நடவடிக்கைகளை நோக்கி இட்டுச் சென்றன. இவை சமூக மாற்றத்தை நிகழத்துவதற்கான உரிமைகளும், காரணங்களும் இருப்பதாக நம்பின.
உடோபியா என்பது எதார்த்த உலகின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கற்பனையாக அதற்கு வெளியே கண்டன. ஆனால் புரட்சிகள் எதார்த்த உலகில் வெடிக்கத் துவங்கின. இவை அமெரிக்காவிலும், பிரான்சிலும் பழைய உலகிலிருந்து புதிய உலகிற்கான வழியமைத்தன.
கிரேட் பிரிட்டனின் காலனிகளை மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இழந்தார். பிரான்சின் பதினாறாம் லுாயிஸ் மன்னரின் தலை துண்டிக்கப்பட்டது. சராசரி மக்கள் அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.
புரட்சிகள் உடோபிய சிந்தனைகளை எதார்த்த உலகில் சாத்தியமாக்கிவிடுமா என்கிற கேள்விகளை எழுப்பின?
உடோபிய சிந்தனைகள் நடைமுறைபடுத்தும் பொழுது என்ன விளைவுகள் ஏற்படும், அவை எப்படி எதார்த்தத்தில் வெளிப்படும் என்பதற்கான சாத்தியங்களாக பதினெட்டாம் நுாற்றாண்டின் ஐரோப்பாவும் அமெரிக்காவும் சான்று பகன்றன.
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் உடோபியன் சோசலிசம்
இவர்களைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நுாற்றாண்டில் மாபெரும் தொழிற்புரட்சியின் பின்னணியில் ராபர்ட் ஓவன், டைடுஸ் சால்ட் போன்றவர்கள் தொழிலாளர்களுக்கான மாதிரி சமூகங்களை உருவாக்கினார்கள். இவை தான் Socialist Utopias என அழைக்கப்பட்டன. மத்திய ஸ்காட்லான்டில் அமைந்திருந்தது ஓவனுடைய நியூ லனார்க், மேற்கு யார்க்ஷைரில் அமைந்திருந்தது சால்டினுடைய சால்டைர். இவை சுய தேவை பூர்த்தி பெற்ற சமூக குழுமங்களாக அமைந்தன. இவை அத்தொழிலாளர்களின் துணி ஆலைகளைச் சுற்றி அமைக்கப்பட்டவை. இங்கே தொழிலாளர்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அதற்கு வெளியே வேறெங்கும் வழங்கப்படாத நல்லதொரு வாழ்க்கைச் சூழல் அமைக்கப்பட்டிருந்தது.
மத்திய ஸ்காட்லான்டில் அமைந்திருந்த ஓவனுடைய நியூ லனார்க்
மேற்கு யார்க்சைரில் அமைந்திரு்நத டைடுல்ஸ் சால்ட்டின் சால்டைர் குடியிருப்பின் வடக்குப் பகுதி
இது போன்று சிறிய அளவில் உருவாக்கப்பட்ட பரிட்சார்த்த முயற்சிகள், மனித உரிமை, சமத்துவம், ஜனநாயகம் போன்ற விசயங்களில் பெரிய தாக்கத்தை அன்றைக்கு ஏற்படுத்தின. இவை அமெரிக்க சுதந்திரப் போர் மற்றும் பிரஞ்சு புரட்சி நடந்த காலகட்டமாகும்.
இப்படியாக மனிதகுல வரலாறு முழுதும் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் ஒரு நேர்மையான, நியாயமான, துன்பமும், துயரமும், ஏமாற்றுதலும், ஏற்றதாழ்வுகளும் இல்லாத உலகை கண்டங்கள் தோறும் கனவு கண்டு கொண்டே இருந்திருக்கிறார்கள்.
இந்தக் கனவுகள், அந்தந்த காலகட்ட சமூக நிலைமைகளின் முரண்பாடுகளிலிருந்தும், ஏற்றதாழ்வுகளிலிருந்துமே வடிவம் பெற்றுள்ளன. இவை அதன் எல்லைகளுக்கும், வரம்புகளுக்கும் ஓர் அர்த்தத்தில் உட்பட்டவையாகவும் மற்றொருபுறம் அதற்கான கற்பனையான மாற்றுகளையும் கொண்டதாகவே இருந்துள்ளன.
நவீன காலத்தின் துவக்கத்தில் அவை ஐரோப்பா கண்டத்தில் தாமஸ் மூரின் கற்பனைகளில் துவங்கி, 18ம் நுாற்றாண்டுகளில் நடைமுறையை மாற்ற முயற்சித்து, 19ம் நுாற்றாண்டுகளில் தொழிற்புரட்சி காலத்தில் அது தொழிலாளி வர்க்கத்தோடு இணைக்கப்பட்டு உணரத் துவங்கியது.
ராபர்ட் ஓவன், டைடுல்ஸ் சால்ட் போன்ற நல்ல மனம் படைத்த முதலாளிகளின் தொழிலாளர்களுக்கான நலன் விரும்பும் சிறு குடியிருப்புகளாக பரிட்சித்து பார்க்கப்பட்டு, பாரிஸ் கம்யூனில் தொழிலாளர் வர்க்க ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் எல்லைகளைத் தொட்டு, சோவியத் யூனியனில் பாட்டாளி வர்க்க அரசை உருவாக்கி உலகின் முதல் சோசலிச குடியரசை உருவாக்கி, உலகின் மூன்றில் ஒரு பாகத்தை சோசலிச முகாமிற்குள் கொண்டு வந்த மாபெரும் முயற்சியாக வளர்ந்தது.
இப்படியாக உடோபியன் சோசலிசம் என்பது அறிவியல்பூர்வ சோசலிசமாக தத்துவார்த்த ரீதியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் துவங்கி லெனின், மாசேதுங் வரை வளர்த்தெடுக்கப்பட்டது.
12.999066
80.232448