சோசலிசச் சந்தை
“ரஷ்யக் கல்வியியல் முற்றிலும் மாறுபட்டது…” என்ற தலைப்பில் 20 பிப்ரவரி 2013 அன்று கீற்று இணையதளத்தில் பேராசிரியர் ந.முத்துமோகனின் நேர்காணல் ஒன்று வெளியாகியிருந்தது. சோவியத் யூனியன் பற்றிய அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் அந்த நேர்காணலில், ‘சோசலிசச் சந்தை’ என்பது குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“சமீபத்தில் சீனக் கம்யூனிஸ்ட் அறிஞர் ஒருவரின் கட்டுரை ஒன்றைப் படித்தேன். சந்தை என்ற விஷயமே முதலாளியத்துக்குச் சொந்தமானது என நாம் கருதிக் கொண்டிருக்கிறோம், ஆனால் சோசலிச உற்பத்தி என்பது உள்ளது போலவே சோசலிசச் சந்தை என்ற ஒன்றும் உண்டு. சோசலிசச் சந்தை பற்றிய புரிதல் இன்றி அதனை சோசலிசப் பகிர்வு எனப் பொதுவாகப் புரிந்துகொண்டதால், அந்தப் பகிர்வை நிர்வகிப்பது அரசு அல்லது கட்சி என முடித்துவிட்டதால், அரசு சார்ந்த அதிகார மையம் வலுப்பட்டுவிட்டது, உற்பத்தியாளர்களின் மற்றும் நுகர்வாளர்களின் இடம் மறுக்கப்பட்டு விட்டது என்று எழுதுகிறார். சோசலிச சந்தை எப்படிப்பட்டது? அதன் பண்புகள் யாவை? அது சோசலிசச் சந்தையாகத் தொடர்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? சோசலிசச் சந்தையில் உற்பத்தியாளர், நுகர்வாளரின் பங்கு என்ன? என்ற விஷயங்களைப் பற்றி நாம் யோசிக்கத் தவறி விட்டோம் என்று அக்கட்டுரை பேசுகிறது. சோசலிச சந்தைச் சக்திகள் பற்றிய அங்கீகாரம் இல்லாத சூழல்களில் அவை தன்னிச்சையாகச் செயல்பட முனையும்போது அவை எதிர்ப்புரட்சி சக்திகளாக நம் கண்ணில்படும். இப்படித்தான் சோசலிசத்திற்குள் சந்தை என்ற ஒன்று தோன்றிவிட்ட சூழலை எதிர் மறையாகப் பார்க்கத் தொடங்கினோம்.
இந்த எதிர்மறை உணர்வு அது குறித்து நம்மைச் சிந்திக்க விடாமல் செய்துவிட்டது என்று எழுதுகிறார்.”
மேற்ச்சொன்ன சிந்தனை முன்வைக்கப்படுவதற்கான காரணமாக கட்டுரையில் கீழ்க்கண்டவாறு சோவியத் யூனியன் அனுபவம் விளக்கப்படுகிறது:
“மேற்கு நாடுகளைப் பற்றிய அரசியல் ரீதியான மதிப்பீடுகளைச் சுமந்து வரும் பத்திரிகைச் செய்திகள் ஒருபுறமிருக்க, ஜீன்ஸ், டீ ஷர்ட், கொக்ககோலா, ஃபான்டா, மேற்கத்திய இசை அல்லது திரைப்படம் போன்ற மேற்கத்தியச் சரக்குகள் மீது மக்களிடையில் பரவலான மோகம் தென்பட்டது. அவை எங்காவது ஒரு கடையில் அல்லது மெட்ரோ ஸ்டேஷன் வாசலில் விற்கப்படுகின்றன எனில் நீண்ட கியூவில் மக்கள் உடனடியாகக் குவிந்துவிடுவார்கள். சோவியத் சூப்பர் மார்க்கெட்டுகளில் மற்றும் கடைகளில் ஒரேவிதமான நுகர்வுப் பொருட்கள் ஒரே விதமான பேப்பர்களில் அல்லது பாக்கெட்டுகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒருவர் ஆர்வத்தோடு அவற்றில் ஏதோ ஒன்றைத் தேர்வு செய்து எடுத்தார் என்று சொல்லக்கூடிய வகையில் பலவகைப் (Variety) பொருட்கள் அங்கே இருக்காது. தேர்வுகளுக்கான வாய்ப்பு மிகக் குறைவானதாகவே இருக்கும்.
மக்களிடையில் தென்பட்ட மந்தகதி குடிப்பழக்கம், குடும்பங்களின் உடைவு, குழந்தைகள் புறக்கணிக்கப் படுவது, பொதுப் பிரச்சினைகளில் அக்கறையின்மை ஆகியவற்றில் அதிகமாக வெளிப்பட்டது. அந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கட்சி அதிகமாகப் பேசியது. ஆனால், அந்தப் பேச்சுக்கள் மேலோட்டமாக இருந்தனவே தவிர அடிப்படையாகப் பிரச்சினையை அணுகித் தொட்டதாகத் தெரியவில்லை. கிராமப்புறங்களுக்கு நாங்கள் பயணம் செய்திருக்கிறோம். மல்தாவியாவில் திராட்சை, மற்றும் ஆப்பிள் தோட்டங்களில் பழங்கள் பறிக்கும் வேலைகளைச் செய்ய கோடை விடுமுறையில் மாணவர்கள் செல்லுவார்கள். வருடத்தில் 40 நாட்கள் உக்ரைன், பேலோ ருஷ்யாவின் சிறுநகரங்களில் ரசாயன தொழிற் சாலையில் தொழிற்பயிற்சிக்காகச் சென்றிருக் கிறேன். கிராமப் புறங்களில் நான் மேலே சொன்ன மந்தகதியும் அக்கறையின்மையும் அதிகமாகத் தென்படும். மதுப்பழக்கம், குடும்பங்களின் சிதைவு ஆகியவற்றையும் அங்கு அதிகம் சந்திக்க வேண்டி வரும். கிராமங்களின் பாதிப்பில் நகரங்களைப் பேணுகிறார்களோ என்ற தோற்றம் ஏற்பட்டதுண்டு.அந்தச் சமயத்தில் எங்களிடையில் நடந்த சில விவாதங்களை நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.
மிகப் பெரிய ஒரு சோசலிசப் புரட்சியை நடத்திய இந்த மக்களை, இரண்டாம் உலகப் போரில் மிகப் பெரிய தியாகங்கள் செய்த இந்த மக்களைக் காலுக்குள் கிடக்கும் கந்தல் துணி போன்ற ஜீன்ஸ்களுக்காக இப்படி கியூவில் நிற்கவைத்துவிட்டார்களே என்று அந்த நாட்களில் பேசியதுண்டு.”
சோவியத் யூனியன் அனுபவத்தின் வாயிலாக இரண்டு விசயங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, மக்களை ஈர்க்கும் விதத்திலான வடிவங்களில் ஒரு பொருளுக்கான பல்வேறு பிராண்ட்கள் விற்பனைக்கு கிடைப்பதில்லை. தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. சாரமாக கூறுவதென்றால் முதலாளித்துவத்தில் உள்ள இந்த அம்சத்திற்கு சோசலிசத்தில் மாற்று இல்லை. இரண்டாவது, முதலாளித்துவத்திற்கு மாற்றான வாழ்க்கையில் ஒரு விறுவிறுப்பு இல்லை. வாழ்க்கை மந்த கதியில் வெறுப்பும் சலிப்பும் நிறைந்ததாக இருக்கிறது.
இவற்றை எதிர்கொள்வதற்கான மாற்றாகவே இங்கே ‘சோசலிசச் சந்தை’ என்கிற பதமும், அரசியலும், கோட்பாடும், வாழ்க்கைமுறையும், தத்துவமும் முன் வைக்கப்படுகிறது.
சுரண்டல் சமூக அமைப்புகள் வரை மனிதர்கள் உணவு, உடை மற்றும் இருப்பிடத்திற்கான பெரும் உழைப்பு மற்றும் போராட்டங்களிலேயே வாழ்வை செலவழிக்கிறார்கள். ஆகவே தான் அவை பற்றிய பெரும் கனவுகளும், ஏக்கங்களும், அவற்றை விதவிதமாக அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பங்கள் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. அந்த ஆர்வங்களை சந்தைப்படுத்திக் கொள்வதுதான் முதலாளித்துவ சந்தை செயல்பாட்டிற்கான அடிப்படையாக அமைகிறது.
சந்தைக்கான உற்பத்தி முறையிலிருந்து தேவைக்கான உற்பத்தி முறைக்கு மாறுவதுதான் சோசலிசம் என்ற அடிப்படை கருத்தே சந்தை என்கிற விசயத்தை முற்றிலும் மறுத்தொதுக்கக் கூடியதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது.
மனிதகுலம் இந்த அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டத்திலிருந்து விடுபடும் பொழுது, அவர்களுக்கான உண்மையான பிற சவால்கள் முன் வைக்கப்பட வேண்டியுள்ளது. சோசலிசப் புரட்சிக்குப் பிறகு சோசலிச உற்பத்திமுறை கட்டமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கான அரசியல், சமூக அமைப்பு முறைகள் வளர்க்கப்பட வேண்டியிருக்கிறது. அதிகாரம் முழுவதும் உழைக்கும் மக்கள் மயமாக்கப்பட வேண்டியிருக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயக வரம்புகள் உடைத்தழிக்கப்படவும், முழுமையான மக்கள் ஜனநாயகம் கட்டமைக்கப்படவும் வேண்டியிருக்கிறது. மக்களின் சமூக அரசியல் கடமைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அவை கட்டாயமானதாக, வாழ்க்கை விதியாக மாற்றம் காண வேண்டியிருக்கிறது. பிற சமூக மக்களின் விடுதலைக்காக போராட வேண்டிய கடமைகள் அவர்களால் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கிறது. கலாச்சாரம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் பல புதிய சவால்கள் மக்கள் முன்பு வைக்கப்பட்டு திட்டமிட்ட முறைகளில் ஒவ்வொரு துறையிலும் முதலாளித்துவத்தின் நோக்கங்களுக்கு நேர்எதிரான திசைவழிகளில் வளர்ச்சி காணப்பட வேண்டியுள்ளது. இவை அனைத்தும் குறித்த தீவிரமான விவாதங்களும், ஆய்வுகளும், படைப்புகளும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
ஆனால் முதலாளித்துவத்தில் நிலவிய அடிப்படைத் தேவைக்கான பரபரப்புகள் குறைந்தவுடன், புதிய முன்பை விட வளர்ச்சியடைந்த தனி மனித தேவைகளுக்கு மாற்றான சமுகத் தேவைகளுக்கான பிடிப்பு, தேடல், மற்றும் போராட்டங்களால் அவ்விடம் நிரப்பப்பட வேண்டியுள்ளது. இத்தகைய நிகழ்ச்சிநிரல்கள் இல்லாத சமூகங்கள் தேய்ந்து ஒளிகுன்றி மறைந்தழிவது தவிர்க்க முடியாதனவே.