பார்க்க சினிமா, படிக்க புத்தகம், கொறிக்க பாப்கார்ன்
Posted by மகேஷ் மேல் ஜனவரி 18, 2011
புத்தகங்கள் எழுதி வெளியிடுவதில் இரண்டு விதமான போக்குகள் உள்ளன என நினைக்கிறேன்.
தன்னுடைய கருத்துக்களை, சிந்தனைகளை, ஆய்வுகளை, படைப்புகளை வெளிக்கொணர வேண்டும் என்பது முதல் வகை. புத்தக விற்பனையில் இன்றைக்கு நல்ல வியாபாரம் ஆகக் கூடிய தலைப்புகள் என்னவென்று தேடித் தொகுத்து அவற்றை வாசகர்கள் விரும்பும் வகையில் அமைத்து வெளியிடுவது இரண்டாவது வகை.
இன்றைக்கு பெரும்பான்மையான தமிழ் புத்தக வெளயீடுகள் இந்த இரண்டாவது வகையையே சாருகிறது எனவே நினைக்கிறேன்.
முதலில் இவர்கள் எந்தத் துறை சார்ந்த புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆகின்றன என கள ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள் (இவற்றை நாம் அறிந்து கொள்வதற்கு சுலபமான வழி, இத்தகைய பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை வைத்தே அவற்றை நாம் புரிந்து கொண்டுவிடலாம்.). இரண்டாவதாக எத்தகைய மனப் போக்குகள் கொண்ட மக்கள் புத்தகங்கள் படிக்கிறார்கள்? அத்தகைய மக்களின் புத்தகத் தேவைகள் எப்படிப்பட்டனவாக இருக்கின்றன? என மேலும் புதிய தலைப்புகளில் புத்தகங்களை வெளியிடுவதற்காக ஆய்வுகள் செய்கிறார்கள்.
இத்தகைய போக்குகள் முழுக்க முழுக்க ஜவுளிக் கடைகளும், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையகங்களும் கடைபிடிக்கும் வழிமுறைகளாகவே உள்ளன. இன்றைக்கு புத்தகங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டிற்கான இலக்கணங்கள் நேற்றைய பொருளில் இல்லை. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பும் பெற்ற பின்பும் இருந்த நிலமைகள் இன்றைக்கு இல்லை. அப்பொழுது அரசுக்கு எதிரான செய்தித்தாள்களும், பத்திரிகைகளும், புத்தகங்களும் விற்பனை செய்ய தடை இருந்தன. அதனையும் மீறி அவை எங்கெங்கோ பதிப்பிக்கப்பட்டு மிகமிக ரகசியமாக மக்களைச் சென்றடைந்தன. குறிப்பாக கம்யூனிச புத்தகங்கள் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டதும், அவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டதும் எத்தகைய துப்பறியும் கதைகளைவிடவும் சுவாரசியமானவை.
ஆனால் அவற்றின் நோக்கங்கள் நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவதாக, ஏழை மக்கள் அத்தத்துவங்களை படித்துணர வேண்டும். சரிகளையும் தவறுகளையும் இனம் கண்டு கொண்டு தங்கள் பாதைகளையும் பார்வைகளையும் தெளிவும் உறுதியும் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கங்களைக் கொண்டதாக இருந்தது. அத்தகைய புரட்சி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் தான் அத்தகைய இலக்கியங்களை எழுதி ரகசியமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இன்றைக்கு புத்தகங்கள் எழுதுபவர்கள் வாழ்க்கைக்கும், நோக்கங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாத விசயங்களையெல்லாம் வியாபாரம் வருமானம் என்ற காரணங்களுக்காகவே எழுதுகிறார்கள். “ஸ்டாலின்”, “மா சே துங்”, “லெனின்”, “காரல் மார்க்ஸ்”, “டிராட்ஸ்கி”, “முதல் உலகப் போர்”, “இரண்டாம் உலகப் போர்”, “மக்கள் சீனம்”, “சே குவேரா” எல்லா தலைப்புகளிலும் நவீன முறையில் அச்சடிக்கப்பட்ட கவர்ச்சிகரமான அட்டைகளுடன், தரமான காகிதத்தில் ஏழை உழைக்கும் மக்கள் வாங்க முடியாத விலைகளில் (நல்ல வேளை இத்தகைய புத்தகங்கள் அவர்கள் கைகளுக்கு போய் அவர்கள் இத்தகைய விசயங்களின் மீது அதிருப்தி அடைய விடாமல் பணம் தடுக்கிறது) விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
“இரண்டாம் உலகப் போர்” பற்றி எழுத முடிவு செய்தவுடன் எங்கிருந்து துவங்குவது என யோசிக்கிறார்களாம்! உலக பொருளாதார நெருக்கடி, முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயக்கப் போக்கு, அதன் இயல்பான உற்பத்தி முறை சுழற்சியில் தவிர்க்க முடியாமல் ஏற்படும் தேக்கம் மற்றும் நெருக்கடி, உலகை மறுபங்கீடு செய்து கொள்வதற்கான ஏகாதிபத்தியங்களுக்குள்ள கட்டாயம், உலகம் இரு பெரும் அணிகளாக அணி சேர்ந்ததன் பின் புலம், உலகப் போரின் காரணங்களை ஆய்வு செய்வதில் கடைபிடிக்கப்படும் பல்வேறு தத்துவப் போக்குகள், அவற்றின் நிறை குறைகள், ஆகியவற்றிலிருந்து துவங்குவதில் அவர்களுக்கு விருப்பமில்லை. அது வாசகர்களுக்கு ஒரு கதை படிப்பது போல சுவாரசியமான பொழுது போக்கான வாசிப்பிற்கு உதவாது, சீக்கிரம் சலிப்புற்று புத்தகத்தை கடாசி விடுவார்கள் எனவே ஹிட்லரிடமிருந்து இரண்டாம் உலகப் போரைத் துவங்கி ஹிட்லரின் மறைவோடு புத்தகத்தை முடிப்பது ஒரு சுவாரசியமான விறுவிறுப்பான துப்பறியும் கதை சொல்லும் போக்காக அமையும் என முடிவு செய்கிறார்கள்.
“இரண்டாம் உலகப் போர்” பற்றிய இந்த அணுகுமுறையை “முதல் உலகப் போர்” விசயத்தில் கடைபிடிக்க முடியவில்லை என்பது அவர்களுக்கு மிகுந்த அயர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. முதல் உலக யுத்தத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை இப்படியாக ஒரு மனிதனைச் சுற்றி பின்னிக் காட்ட முடியவில்லை என்பதை ஏதோ ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளனுக்கு மனித குல வரலாற்றின் ஓரிடத்தை பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்காமல் அவ்விடத்தை கடக்க முடியாது திண்டாடுவதைப் போல பெரிய அளவில் அங்கலாய்ப்பை ஏற்படுத்துகிறது.
வரலாறு என்னும் மாபெரும் அண்டவெளியை நோக்கி வாசகன் என்னும் துகளை அழைத்துச் சென்று அதன் விதிகளையும் செயல்முறைகளையும் முரண்களையும் அறிமுகப்படுத்தி வரலாறை அதன் முழுமையிலிருந்து, தன் காலத்தின் தேவைகளிலிருந்து, தன்னுடைய பலஹீனங்களிலிருந்து வெளியே வந்து, கற்றுக் கொள்ள பயிற்சியளிப்பதை விட்டுவிட்டு, வாசகன் என்னும் துகளுக்குள் அண்டவெளி என்னும் மாபெரும் இயக்கப் போக்கை வெட்டிச் சிதைத்து சின்னாபின்னப்படுத்தி நுழைக்க முயற்சிக்கும் முட்டாள்தனமாகவே படுகிறது.
மேற்சொன்ன புத்தகங்களில் அரசியல் பொருளாதார பிரச்சினைகள், முதலாளித்துவ நெருக்கடிகள், உலகை மறுபங்கீடு செய்வதற்கான நோக்கங்கள் பதிவாகியிருக்கலாம். ஆனால் நிசசயம் அவை அவற்றிற்கான முக்கியத்துவத்தோடும் வரலாறை இயக்கியதில் அந்த விதிகள் ஆற்றிய தீர்மானகரமான பங்கு என்னும் அடிப்படையில் அவை பதிவாகியிருக்க வாய்ப்பில்லை. காரணம் எழுத்தின் நோக்கம், எழுத்தாளனின் எதிர்பார்ப்புகள் தான் விசயங்களை விளக்குவதில் தீர்மானகரமான பங்கு வகிக்கின்றன.
“ஸ்டாலின்”, “மா சே துங்”, “லெனின்”, “காரல் மார்க்ஸ்”, “டிராட்ஸ்கி”, “சே குவேரா” என பல கம்யூனிச தலைவர்களின் பெயர்களில் புத்தகங்கள் வெளியாகின்றன. எனக்கு இவை எதுவுமே உவப்பானதாக இல்லை. பொதுவாக இத்தகைய தனிமனிதர்களின் பெயரிலான புத்தகங்கள் அனைத்தும் கதாநாயகர்களை அல்லது வில்லன்களை கட்டமைக்கும் ஒரு முயற்சியாகவே படுகிறது. அடிப்படையில் இது வீரதீர சாகச கதை பாணிகளையோ அல்லது திகில், உளவு, துப்பறியும் கதை பாணிகளையோ கொண்டதாகவே உள்ளன.
இப்படிப்பட்ட புத்தகங்களை எழுதும் ஆசிரியர்களுக்கு “வரலாற்றில் தனிமனிதர்கள் வகிக்கும் பாத்திரம்” குறித்தோ “வரலாற்று இயக்கப் போக்கில் தனிமனிதர்களுக்கான முக்கியத்துவம்” குறித்தோ எந்த ஞானமும் இல்லாதிருப்பதும். சமூக முன்னேற்றதில், மனித குலத்தின் விடுதலையில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையும், வெறும் வியாபார நோக்கங்களுக்காகவே மனிதர்களை உயர்த்தியும் தாழ்த்தியும் எழுதுகிறார்கள் என்றே நம்புகிறேன்.
நித்யானந்தாவிடமும், ஜக்கி வாசுதேவிடமும், ரவிசங்கரிடமும், சிவசங்கர பாபாவிடமும் ஏமாறும் மக்களுக்கு அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படவும் வெறுப்பு ஏற்படவும் என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அதே போன்ற காரணங்களைத்தான் மேற்சொன்ன தலைவர்களின் மேலும் இவர்கள் கட்டமைக்க முயல்கிறார்கள்.
உலகம் நம்மை நோக்கி வராது, நாம் தான் உலகை நோக்கி முன்னேறக் கற்றுக் கொள்ள வேண்டும்; சமூக வாழ்வையும், இயற்கையையும், வரலாறையும், விஞ்ஞானத்தையும், இலக்கியத்தையும் அதன் அடிப்படையிலிருந்து ஐயம் திரிபுற புரிந்து கொள்வதற்கு மனித குலம் சகலவிதமான வேற்றுமைகளிலிருந்தும் ஏற்றதாழ்வுகளிலிருந்தும் முழுமையான விடுதலை பெற வேண்டும் என்ற மிக உயர்ந்த லட்சியங்களும் கனவுகளும் ஒரு மனிதனுக்குள் எந்தச் சூழலிலும் அணையாத ஜோதியாய் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற உண்மையை சொல்லித்தராத எந்த எழுத்தும் யோக்கியமான எழுத்தாக இருக்கமுடியாது. எந்த புத்தகமும் பயனுள்ள புத்தகமாக இருக்க முடியாது.
சங்கர் said
அருமையான பதிவு. ஆழமான விமர்சனம்.
சினிமா ஒரு கலை. ரசனைமிக்க ஒரு பொழுதுபோக்கு என்றில்லாமல்,ஒரு குத்துப் பாட்டு, இடை அழகிகள், தொடை அழகிகள் என்று கடமைத்து காசுபார்க்கும் கூத்தாடிதனம்தான் இப்போது இப்போது
புத்தக வெளியீட்டிலும் நடக்கின்றது.
அதைவிட கூத்து, இவர்கள் வெளியிடும் புத்தகங்களை இவர்களே இலக்கியம் என்று சொல்லில் கொள்வார்கள்
சங்கர்
Pattu said
Very true.Most of the POP books are useful , may be , in the initial reading years. Public needs to create a habit of in-depth reading. Unfortunately , neither the family nor the educational heirarchy is interested in developing this habit. Instant gratification is the only mantra.
அருண் பிரபு said
மிக சரியான பதிவு. கிழக்கு ஒரு கமர்சியல் பதிப்பகம்.
Prodigy Books – All are waste. சிந்து சமவெளி நாகரிகம் முதலிய எல்லாம் குப்பை புத்தகங்கள்.
//இப்படிப்பட்ட புத்தகங்களை எழுதும் ஆசிரியர்களுக்கு “வரலாற்றில் தனிமனிதர்கள் வகிக்கும் பாத்திரம்” குறித்தோ “வரலாற்று இயக்கப் போக்கில் தனிமனிதர்களுக்கான முக்கியத்துவம்” குறித்தோ எந்த ஞானமும் இல்லாதிருப்பதும். சமூக முன்னேற்றதில், மனித குலத்தின் விடுதலையில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையும், வெறும் வியாபார நோக்கங்களுக்காகவே மனிதர்களை உயர்த்தியும் தாழ்த்தியும் எழுதுகிறார்கள் என்றே நம்புகிறேன்.//
அருமை. இவர்கள் வரலாற்று நாயகர்களை பற்றி இவ்வாறு புத்தகம் எழுதுவதற்கு பதில், தலைவர் ‘கலைஞரை’ புகழ்ந்து எதாவது எழுதலாம்.
சும்மா, இணையத்திலும், wikipedia – விலும் படித்து விட்டு புத்தகம் எழுதுகிறார்கள் என நினைக்க தோன்றுகிறது.
சீனு said
//பார்க்க சினிமா, படிக்க புத்தகம், கொறிக்க பாப்கார்ன்//
சே! அவசரமாக படிக்கும் போது கடைசி வார்த்தையை வேறு மாதிரி படிச்சுட்டேன். எல்லாம் தமிழ்மனம் தந்த ப்ராக்டீஸ்… 😉